உலக செய்திகள்

ஜனக்பூர் - அயோத்தி இடையே ரெயில் பாதை அமைக்க திட்டம்

நேபாளத்தின் ஜனக்பூரில் இருந்து அயோத்தி வரை ரெயில்களை இயக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

காத்மாண்டு,

நேபாளம் தலைநகர் காத்மாண்டில் கடந்த ஜூன் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் 10வது திட்ட வழிநடத்தல் குழு கூட்டம் மற்றும் 8வது கூட்டு பணிக்குழு கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், இந்தியா, நேபாளம் இடையே ரெயில் போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்துவது மற்றும் ரெயில்வே துறையில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து இந்தக் கூட்டங்களில் ஆலோசிக்கப்பட்டது.

குறிப்பாக நேபாளத்தின் ஜனக்புரி மற்றும் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி இடையே பயணிகள் ரெயில் சேவையை ஏற்படுத்துவதற்கான வழிகாட்டு நடைமுறை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை

சீதா தேவியின் பிறந்த இடமான ஜனக்பூர் (நேபாளம்) மற்றும் ராமர் பிறந்த இடமான அயோத்தி (இந்தியா) இடையே புதிய பயணிகள் ரெயில் சேவையை தொடங்குவதற்கான நிலையிலான செயல்முறைகளை குறித்து இந்திய மற்றும் நேபாளம் நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனை தொடர்ந்து நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள தகவலின்படி,

ஜெய்நகர்–பிஜல்புரா–பர்திபாஸ் மற்றும் ஜோக்பானி–பிராட்நகர் அகல ரெயில் பாதை திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும் இருதரப்பும் விவாதித்தன. இந்த இரண்டு திட்டங்களும் இந்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ரெயில் சேவை

மேலும் இந்தியாவின் அயோத்தி மற்றும் நேபாளத்தின் ஜனக்பூர் நகரங்களை இணைக்கும் பயணிகள் ரெயில் சேவையை தொடங்குவதற்கான நடைமுறை வழிகாட்டுதல்கள் மற்றும் செயல்பாட்டு விதிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த சேவை தொடங்கப்பட்டால் இரு நாடுகளுக்கும் இடையிலான மத மற்றும் சுற்றுலா பயணங்கள் மேலும் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.