ஜகர்த்தா,
அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
பயணத்தின் முதல் நாடாக பிரதமர் மோடி நேற்று முன் தினம் இந்தோனேசியா சென்றார். அவரை அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோ விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார்.
இதையடுத்து, தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியா - இந்தோனேசியா இடையே வர்த்தகம், பாதுகாப்பு உள்பட பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்நிலையில், இந்தோனேசியாவில் ஜாவா தீவில் அமைந்துள்ள இந்து மத வழிபாட்டு தலமான பரம்பானன் கோவிலை (சிவன் கோவில்) பிரதமர் மோடி இன்று பார்வையிடுகிறார். 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலை இந்தோனேசிய அதிபர் பிரபோவோவுடன் சென்று பிரதமர் மோடி பார்வையிடுகிறார். அதன்பின்னர், இந்த கோவிலை புனரமைக்கும் பணியை இந்தோனேசியாவுடன் இணைந்து இந்தியா மேற்கொள்ள உள்ளது. இந்த புனரமைப்பு மற்றும் கோவில் பாதுகாப்பு திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.