அமெரிக்காவை தளமாக கொண்ட தரவு பகுப்பாய்வு நிறுவனமான 'மார்னிங் கன்சல்ட்' நிறுவனம் நடத்திய உலகளாவிய கணக்கெடுப்பின்படி பிரதமர் மோடி உலகின் மிகவும் புகழ்மிக்க தலைவராக மீண்டும் தேர்வாகி இருக்கிறார். 68 சதவீத ஒப்புதல் மதிப்பீடுகளுடன் அவர் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டும் பிரதமர் மோடி உலகின் மிகவும் பிரபலமான தலைவராக தேர்வானது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் 75 சதவீத ஒப்புதல் மதிப்பீட்டைப் பெற்றிருந்தார்.
26 சதவீத மக்கள் மோடியின் செயல்பாடுகளுக்கு ஒப்புதல் அளிக்காத நிலையில் சுமார் 6 சதவீத மக்கள் தங்கள் கருத்தை பகிரவில்லை அல்லது தெரியாது என்று பதிலளித்து உள்ளனர்.
இந்த பட்டியலில் மோடியைத் தொடர்ந்து 2-வது இடத்தில் இருப்பவர் சுவிட்சர்லாந்தின் தலைவர் கை பார்மெலின் ஆவார். இவர் 62 சதவீத ஒப்புதல் மதிப்பீடுகளையும், 20 சதவீத அதிருப்தி மதிப்பீடுகளையும் பெற்றுள்ளார். 3-வது இடத்தில் தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் உள்ளார்; இவரும் 62 சதவீத ஒப்புதல் மதிப்பீடுகளைப் பெற்றிருந்தாலும், இவருக்கான அதிருப்தி மதிப்பீடு 30 சதவீதமாக உள்ளது. கனடா பிரதமர் மார்க் கார்னி 55 சதவீத மக்களின் ஒப்புதலைப் பெற்று, பட்டியலில் 7-வது இடத்தைப் பிடித்து முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் 14-வது இடம் பிடித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் செயல்பாடுகளுக்கு 39 சதவீத மக்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். 55 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். பட்டியலில், மிகக் குறைந்த அளவிலான ஒப்புதல் மதிப்பீடுகளைப் பெற்ற தலைவராக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளார்; இவருக்கு வெறும் 17 சதவீத மக்களின் ஒப்புதல் மட்டுமே கிடைத்துள்ள நிலையில், 75 சதவீதம் என்ற மிக அதிகமான அதிருப்தி மதிப்பீடும் பதிவாகியுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் 10 கோடி (100 மில்லியன்) பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலக தலைவராகவும், அரசியல்வாதியாகவும் பிரதமர் மோடி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.