உலக செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவம் துப்பாக்கி சூடு - 30 பேர் பலி

துப்பாக்கி சூட்டில் 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

லாகூர்,

ஜம்மு-காஷ்மீரின் 35 சதவீத பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு தனியே ஜனாதிபதி, பிரதமர், சட்டசபை உள்ளது. இதனிடையே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், விலைவாசி உயர்வு, அரசியல் உரிமைகள் பறிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி அவாமி நடவடிக்கை குழு என்ற மனித உரிமைகள் அமைப்பு அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது.

போராட்டம்

இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீர் அரசுக்கு எதிராகவும், மின்சாரம், உணவுப்பொருளில் மானியம் உள்பட 38 கோரிக்கைகளை முன்வைத்து மனித உரிமை அமைப்பு இன்று போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்றோர் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவி வரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

துப்பாக்கி சூடு

அப்போது, போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த துப்பாக்கி சூட்டில் 30 பேர் உயிரிழந்தனர். மேலும், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.