இஸ்லாமாபாத்,
ஈரான் போர் காரணமாக உலகளவில் எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், மின்சாரக் கட்டண உயர்வைத் தவிர்க்க பாகிஸ்தான் அரசு நாடு தழுவிய மின்வெட்டை அறிவித்துள்ளது. இதன்படி, தினமும் மாலை 5 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலான நேரங்களில், சுமார் இரண்டேகால் மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிசக்தித் தட்டுப்பாடு மற்றும் இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவற்றைச் சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், நாட்டின் முக்கிய நகரங்களான கராச்சி மற்றும் ஐதராபாத் ஆகியவற்றுக்கு இந்த மின்வெட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டமிட்ட மின்வெட்டு மூலம் மின் கட்டணம் யூனிட்டிற்கு 6 ரூபாய் வரை உயர்வது தவிர்க்கப்படும் என அந்நாட்டு எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மின்வெட்டால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.