* லிபியாவின் திரிபோலி நகரை கைப்பற்றி, ஐ.நா. ஆதரவு பெற்ற அரசை அகற்றுவதற்கு அந்த நகரின் கிழக்கு பகுதியை சேர்ந்த போட்டி ராணுவம் முயற்சித்து வருகிறது. இந்த நிலையில், போட்டி ராணுவம் நடத்த முயற்சித்த தாக்குதலை, ஐ.நா. ஆதரவு அரசுப்படைகள் முறியடித்து, அதன் 25 வீரர்களை கொன்று குவித்துள்ளன. 4 வாகனங்களும் அழிக்கப்பட்டுள்ளன.
* பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நிறுவன தலைவர்களில் ஒருவரான முபாஷிர் ஹசன், லாகூரில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 98. பூட்டோ மந்திரிசபையில் 1971-74 காலகட்டத்தில் இவர் நிதி மந்திரி பதவி வகித்தது நினைவுகூரத்தக்கது.
* அமெரிக்காவில் மேரிலேண்டில் போலீசாருடனான மோதலில் 21 வயது வாலிபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக மாண்ட்கோமெரி கவுண்டி போலீஸ் கூறியது. ஆனால் அந்த வாலிபர் வீட்டில் தனது படுக்கையறையில் தூங்கிக்கொண்டிருந்தபோது ஒரு போலீஸ் அதிகாரியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அவரது குடும்ப வக்கீல் கூறி உள்ளார். இந்த சம்பவத்தில் வாலிபரின் காதலியும் காயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* பாகிஸ்தானில் இருந்து 2 கோடி முக கவசங்களை பிற நாடுகளுக்கு கடத்தியுள்ளதாக பிரதமர் இம்ரான்கானின் மூத்த உதவியாளர் மீது புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.