ஜிரெஸ்ஜவ்,
கேரளாவை சேர்ந்தவர் அபிஜித். உக்ரைனின் தலைநகர் கீவ்வில் ஒரு சிறிய உணவு விடுதியை நடத்தி வருகிறார். இவரது மனைவி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், ரஷிய போரால் இருவரும் கீவ் நகரில் சிக்கி கொண்டனர். இதன்பின்பு ஆபரேசன் கங்கா திட்டத்தின் கீழ் இந்திய தூதரக பணியாளர் உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
அவர்கள் இருவரும் போலந்தின் ஜிரெஸ்ஜவ் நகரில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதுபற்றி அபிஜித் கூறும்போது, உக்ரைனில் இருந்து போலந்துக்கு ஒரு பைசா செலவில்லாமல் இந்திய அரசு எங்களை கொண்டு வந்து சேர்த்துள்ளது. மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிக்கு எனது மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன்.
போலந்தில் உள்ள மருத்துவமனையில் எனது மனைவி சேர்க்கப்பட்டு உள்ளார். மனைவி மற்றும் குழந்தை ஆரோக்கியமுடன் உள்ளனர் என சமீபத்திய தகவல் மருத்துவமனையில் இருந்து வந்துள்ளது. வருகிற 26ந்தேதி என்னுடைய குழந்தை பிறக்க உள்ளனர். இந்தியா மேற்கொண்ட மீட்பு பணியை அடுத்து எனது குழந்தைக்கு கங்கா என்ற பெயரை சூட்ட முடிவு செய்துள்ளேன் என்று தெரிவித்து உள்ளார்.