உலக செய்திகள்

3 நாட்கள் சுற்றுப்பயணம்; செஷல்ஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி

பிரதமர் மோடிக்கு செஷல்ஸ் அரசு சார்பில் சம்பிரதாயமான அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

புதுடெல்லி,

செஷல்ஸ் விமான நிலையத்திற்கு சென்றடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டின் அதிபர் பேட்ரிக் ஹெர்மினி நேரில் சென்று வரவேற்றார்.

செஷல்ஸ் தேசிய தினம்

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு செஷல்ஸ். அந்நாட்டின் 50-ம் ஆண்டு தேசிய தினம் வருகிற 29-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார்.

பிரதமர் மோடிக்கு வரவேற்பு

இதற்காக பிரதமர் மோடி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக செஷல்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். விமானம் மூலம் செஷல்ஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றடைந்த பிரதமர் மோடியை, அந்நாட்டின் அதிபர் பேட்ரிக் ஹெர்மினி நேரில் சென்று வரவேற்றார். தொடர்ந்து பிரதமர் மோடிக்கு செஷல்ஸ் அரசு சார்பில் சம்பிரதாயமான அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இருதரப்பு பேச்சுவார்த்தை

செஷல்ஸ் தேசிய தின கொண்டாட்த்தில் இந்திய கடற்படையின் 2 கப்பல்கள் மற்றும் பாதுகாப்பு படைப் பிரிவினர் கலந்து கொள்ள உள்ளனர். பிரதமர் மோடி தனது பயணத்தின்போது செஷல்ஸ் அதிபர் பேட்ரிக்குடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இந்திய வம்சாவளியினர்

மேலும் செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி, அங்குள்ள இந்திய வம்சாவளியினரை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுகிறார். பிரதமர் மோடி செஷல்ஸ் நாட்டிற்கு மேற்கொள்ளும் 2-வது பயணம் இதுவாகும். இதற்கு முன்பு கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி செஷல்ஸ் நாட்டிற்கு சென்றிருந்தார்.