உலக செய்திகள்

மியான்மர் பயணத்தை நிறைவு செய்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி

மியான்மரில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து விட்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி திரும்பினார்.

யாங்கூன்,

பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீனா சென்றார். அங்கு பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு, பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களை சந்தித்தார். பின்னர் தனது சீன பயணத்தை நிறைவு செய்துவிட்டு நேற்று முன் தினம், மியான்மர் புறப்பட்டு சென்றார். தலைநகர் நய் பியி டாவில் பிரதமர் மோடிக்கு, மியான்மர் அதிபர் ஹிடின் கியாவ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நோபல் பரிசு பெற்றவரும், ஆளும்கட்சி தலைவரும் மியான்மர் அரசு ஆலோசகருமான ஆங் சான் சூகி-யை நேற்று சந்தித்தார். இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது இரு நாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இந்த சந்திப்பின்போது இந்தியா - மியான்மர் இடையே 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதைத்தொடர்ந்து, இன்று மியான்மரில் உள்ள யாங்கூன் பகுதியில் ஷ்வேடகான் பகோடாவிற்கு பிரதமர் மோடி சென்றார். மோடிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்குள்ள புத்தர் பெருமானை வணங்கி பிரார்த்தனையில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து தனது மியான்மர் பயணத்தை நிறைவு செய்து விட்டு பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார்.