பாலசோர்,
முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரித்வி-II ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. பிரித்வி-II வகை ஏவுகணை சுமார் 350 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்துச் சென்று தாக்கும் சக்தி கொண்டது. பிரித்வி-II ரக ஏவுகணைகள் ராணுவ பயன்பாட்டுக்காக கடந்த 2003 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டு விட்டது. என்றாலும் இது அடிக்கடி சோதனை செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று பிரித்வி-II ரக ஏவுகணை சோதித்து பார்க்கப்பட்டது. ஒடிசா மாநிலம் பந்திப்பூரில் நடைபெற்ற இந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிரிகளின் இலக்குகளை வான்பரப்பிலேயே துல்லியமாக அழிக்கும் வல்லமை கொண்டது இந்த பிரித்வி-II .
பிரித்வி-II ஏவுகணைகளில் 500 முதல் 1000 கிலோ எடை கொண்ட வெடிப்பொருட்களை வைத்து பயன்படுத்த முடியும். இது 350 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டது. அணு ஆயுதங்களையும் ஏந்தி செல்லும் இந்த ஏவுகணைகள் திரவ எரிபொருளால் இயங்கும் இரட்டை என்ஜின்கள் கொண்டது.