உலக செய்திகள்

அமெரிக்காவில் தனியார் ஜெட் விமானங்கள் மோதல்; ஒருவர் பலி

அமெரிக்காவில் கடந்த 2 வாரங்களில் 3 பெரும் விபத்துகள் ஏற்பட்டு 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.

தினத்தந்தி

ஸ்காட்ஸ்டேல்,

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் ஸ்காட்ஸ்டேல் விமான நிலையத்தில் ஜெட் விமானங்கள் அடிக்கடி வந்து செல்லும். இந்த விமான நிலையத்தில் இருந்து சில மைல்கள் தொலைவில் அமைந்துள்ள, கோல்ப் மைதானத்தில் வார இறுதி நாட்களில் கோல்ப் போட்டி தொடர் நடைபெறும். இதனை காண்பதற்காக அதிக அளவில் கூட்டம் வரும். ரசிகர்கள் பலரும் ஜெட் விமானங்களில் வந்து செல்வார்கள். இதனால், இந்த பகுதி பரபரப்பாக இருக்கும்.

இந்நிலையில், இந்த விமான நிலையத்தில் 2 தனியார் ஜெட் விமானங்கள் மோதி கொண்டன. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர். ஒருவர் விமானத்தில் இன்னும் சிக்கியுள்ளார். இதனை தொடர்ந்து, ஆம்புலன்ஸ்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்றன. மீட்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதுபற்றி மத்திய விமான போக்குவரத்து துறை நிர்வாகம் வெளியிட்ட செய்தியில், நடுத்தர அளவிலான ஜெட் விமானம் ஒன்று, நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மற்றொரு ஜெட் விமானம் மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில், மோதிய வேகத்தில் ஓடுபாதையில் இருந்து விலகி சென்றது என தெரிவித்து உள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து, விமான நிலையம் மூடப்பட்டு உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி, வர்த்தக ஜெட் விமானம் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் மோதி கொண்டதில் 67 பேர் உயிரிழந்தனர்.

ஜனவரி 31-ந்தேதி பிலடெல்பியாவில் மருந்து பொருட்களை ஏற்றி சென்ற விமானம் விபத்தில் சிக்கியதில் அதில் இருந்த 6 பேரும் கொல்லப்பட்டனர். தரையில் இருந்த ஒருவரும் உயிரிழந்து உள்ளார். கடந்த வாரம், மேற்கு அலாஸ்காவில் சிறிய ரக விமானம் ஒன்று நோமி பகுதியில் விபத்தில் சிக்கியதில் அதில் இருந்த 10 பேரும் பலியானார்கள்.

கடந்த 2 வாரங்களில் இதுபோன்ற பெரும் விபத்துகளை அமெரிக்க விமான போக்குவரத்து துறை எதிர்கொண்டுள்ளது. இதுபற்றி துறை ரீதியிலான விசாரணையும் நடந்து வருகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு