பாங்காக்,
பணம் மற்றும் புகழ் மட்டுமே வாழ்க்கையில் முழுமையான நிம்மதியைத் தந்துவிடாது என்பதை உணர்த்தும் வகையில், தாய்லாந்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை விட்டுவிட்டு துறவறம் செல்ல முடிவு செய்துள்ளார்.
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரபலமான ‘ஹாவெல்ஸ்’ ஐஸ்கிரீம் நிறுவனத்தின் நிறுவனர் சிரிபோங் அக்காரஸ்ரியுக் ஆவார். பல ஆண்டுகளாக கடின உழைப்பின் மூலம் அவர் இந்த நிறுவனத்தை கட்டியெழுப்பியுள்ளார்.
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தனது நிறுவனத்தை தற்போது மொத்தமாக விற்றுவிட்டு, காட்டில் துறவியாக வாழ சிரிபோங் முடிவு செய்துள்ளார். அவரது இந்த முடிவு தொழில் உலகில் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்றுள்ளது.
‘ஹாவெல்ஸ்’ நிறுவனம் தாய்லாந்தில் பிரபலமானதாக இருந்தாலும், தனது நீண்ட நாள் ஆன்மிக கனவை நிறைவேற்றுவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக சிரிபோங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான விற்பனை அறிவிப்பையும் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.