உலக செய்திகள்

நேபாளத்தில் நடந்த கலவரத்தின்போது.. ஹெலிகாப்டர் கயிறு மூலம் தப்பிய மந்திரியின் குடும்பம் - வீடியோ

கலவரத்தின்போது, ஜனாதிபதி மற்றும் பிரதமர் இல்லங்களுக்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்

காத்மாண்டு,

நேபாள நாட்டில் ஆளுங்கட்சியினரின் ஊழலுக்கு எதிராக இளைஞர்கள் இரண்டு நாள்களாக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. அப்போது அந்நாட்டு நாடாளுமன்றம், சுப்ரீம்கோர்ட்டு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் இல்லங்களுக்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதுதவிர முன்னாள் பிரதமர்கள், மந்திரிகளின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

போராட்டம் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் கே.பி.சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். போராட்டம் ஒருகட்டத்தில் கலவரமாக மாறியதைத் தொடர்ந்து, நாட்டில் பாதுகாப்பை நிலைநாட்டும் பொறுப்பை ராணுவம் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து, ஊரடங்கு தடை உத்தரவுகளை ராணுவம் அமல்படுத்தியிருந்தது.

இதற்கிடையே கலவரத்தில் இருந்து தப்பி அந்த நாட்டு மந்திரிகளும், அவர்களது குடும்பத்தினரும் ராணுவ ஹெலிகாப்டர்களில் தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஒரு மந்திரி மற்றும் அவரது குடும்பத்தினர் ஹெலிகாப்டரில் ஏறுவதற்குள் போராட்டக்காரர்களால் அச்சுறுத்தல் ஏற்படும் நிலை ஏற்பட்டது.

நூலிழையில் ஹெலிகாப்டரின் கயிற்றை பிடித்துக்கொண்டு நேபாளத்தில் இருந்து தப்பிய காட்சிகள் வெளியாகி இருக்கிறது. அவர்களை தாக்க ஓடி வந்த போராட்டக்காரர்கள் தரையிலிருந்து பார்த்தபடி நிற்க ஒரு குடும்பத்தினர் கயிற்றை பிடித்தபடி ஹெலிகாப்டரில் தொங்கிக்கொண்டு செல்கிறார்கள். 

SCROLL FOR NEXT