பாரிஸ்,
பிரான்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஹார்டிலாட் கடற்கரையில் இருந்து நேற்று இரவு படகு ஒன்று 82 அகதிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. அவர்கள் ஆங்கில கால்வாய் வழியாக இங்கிலாந்து செல்ல திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில், அந்த கடலில் சில கிலோ மீட்டர்கள் தூரம் சென்ற பிறகு, திடீரென ராட்சத அலைகளில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதனிடையே, பிரான்ஸ் கடற்படை காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த அகதிகளை காப்பாற்றினர்.
இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், 16 பேர் படுகாயம் அடைந்தனர். மீட்கப்பட்ட அனைவரையும் பிரான்ஸ் கடற்படையினர் பத்திரமாக அழைத்து வந்தனர். கடந்த ஒரு மாதத்தில் ஆங்கில கால்வாய் வழியாக இங்கிலாந்து செல்ல முயன்ற அகதிகள் படகு விபத்தில் சிக்கியிருப்பது இத்துடன் மூன்றாவது சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.