வாஷிங்டன் டி.சி.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது.
ஆனால், ஈரான், அமெரிக்கா இடையே நிரந்தர போர் நிறுத்தத்திற்காக பாகிஸ்தானில் 21 மணிநேரம் நீடித்த தொடக்க கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது என அமெரிக்கா தெரிவித்தது.
எனினும், 2-வது சுற்று அமைதி பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதனை உலக நாடுகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. 2 வார கால போர் நிறுத்தத்திற்கான காலக்கெடு முடிவடைய உள்ள சூழலில், இந்த அமைதி பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த சூழலில், ஈரானில் தூக்கு தண்டனையை எதிர்கொள்ளும் பெண்களை விடுவிக்கும்படி டிரம்ப் கோரியுள்ளார். சமூக ஊடக ஆவர்வலரான இயால் யகோபி வெளியிட்ட புகைப்படம் ஒன்றில், ஈரானிலுள்ள 8 பெண்கள் தூக்கு தண்டனையை எதிர்கொள்ள கூடிய சூழலில் உள்ளனர் என தெரிவித்து உள்ளார். அவர்களுடைய புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு உள்ளார்.
இதனை தன்னுடைய ட்ரூத் சோசியல் வலைதளத்தில் பகிர்ந்துள்ள டிரம்ப், என்னுடைய பிரதிநிதிகளுடன் விரைவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ள ஈரானின் தலைவர்களே, இந்த பெண்களை விடுவியுங்கள். நான் உங்களை பெரிதும் பாராட்டுவேன்.
நீங்கள் விடுவித்த பின்னர், அந்த உண்மையை அவர்கள் மதிப்பார்கள் என நான் உறுதியாக கூறுகிறேன். தயவுசெய்து அவர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படுத்த வேண்டாம். அது நம்முடைய பேச்சுவார்த்தைக்கு மிக பெரிய தொடக்கம் ஆக அமையும். இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியதற்காக நன்றி என தெரிவித்து உள்ளார்.