உலக செய்திகள்

மெலிஸ்சா புயலால் பாதித்த கியூபாவுக்கு நிவாரண உதவி: அமெரிக்கா அறிவிப்பு

கியூபாவுக்கு அமெரிக்கா சார்பில் அவசரகால நிவாரண உதவியாக ரூ.27 கோடி மதிப்பிலான உதவி பொருட்கள் மக்களை சென்றடையும்.

வாஷிங்டன் டி.சி.,

கரீபியன் நாடுகளான ஹைதி, ஜமைக்கா உள்ளிட்ட நாடுகளை கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் மெலிஸ்சா என பெயரிடப்பட்ட புயல் தாக்கிது. இதில், கியூபாவும் சிக்கியது. இதனால், 150 ஆண்டுகளில் இல்லாத வகையில் கியூபாவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த சூறாவளி புயலால் தொடர் மழை, பலத்த காற்று ஆகியவற்றுடன் நிலச்சரிவுகளும், வெள்ளமும் ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் பேரிடர்களும் ஏற்பட்டன.

வெள்ளம், நிலச்சரிவால் அந்நாடுகளின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது. இந்தியா தரப்பில் இருந்து கியூபாவுக்கு மருத்துவ உதவி, உபகரணங்கள் உள்ளிட்ட நிவாரண உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி 20 டன் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், கியூபாவுக்கு முதன்முறையாக அமெரிக்கா நிவாரண உதவி வழங்க உள்ளது. இதுபற்றி அந்நாட்டின் வெளிவிவகார துறை மந்திரி ரூபியோ கூறும்போது, கியூபா மக்களுக்கு நேரடியாக எங்களுடைய உதவிகள் சென்றடையும். சட்டவிரோத அரசுக்கு அல்ல என கூறினார்.

சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்டு அதில் இருந்து தொடர்ந்து மீண்டு வருகிற மக்களுக்கு ஆதரவாக நாங்கள் செயலாற்றி வருகிறோம். கத்தோலிக்க ஆலயம் உள்ளிட்ட நண்பர்களின் வழியே அந்நாட்டின் மக்களுக்கு உதவிகள் வழங்கப்படும்.

அவை சரியாக சென்றடைகின்றன என உறுதிப்படுத்துவோம் என கூறினார். இதன்படி, கியூபாவுக்கு அமெரிக்கா சார்பில் அவசரகால நிவாரண உதவியாக ரூ.27 கோடி மதிப்பிலான உதவி பொருட்கள் மக்களை சென்றடையும்.

SCROLL FOR NEXT