கீவ்
நேட்டோ அமைப்பில் சேரும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர், ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதனை முடிவுக்கு கொண்டு வர பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் பலனில்லை. உக்ரைனும் பதிலுக்கு தாக்குதல் நடத்தி வருகிறது.
தொடர்ந்து, போரானது 4 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் மீது பகலில் இருந்து இரவு வரை பல மணிநேரம் நூற்றுக்கணக்கான ராக்கெட்டுகள், டிரோன்கள் ஆகியவற்றை கொண்டு ரஷியா நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் பொதுமக்களில் 16 பேர் பலியாகி உள்ளனர். 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். 2 வாரங்களில் இல்லாத வகையில் ரஷியா நடத்திய மிக பெரிய தாக்குதல் இதுவாகும்.
கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் தாக்குதலில், உக்ரைனில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்து உள்ளனர் என்று ஐ.நா. தெரிவிக்கின்றது.
உக்ரைனின் விமான படை வெளியிட்ட செய்தியில், 636 ஷாகித் ரக டிரோன்கள் மற்றும் பிற ஆளில்லா வான் வாகனங்கள் உள்பட 703 ராக்கெட்டுகள், டிரோன்கள் ஆகியவை ஏவப்பட்டன. அவற்றில், 667 வழிமறித்து தாக்கி அழிக்கப்பட்டன என தெரிவித்து உள்ளது.
எனினும், 26 இடங்களில் 20 டிரோன்கள் மற்றும் 12 ராக்கெட்டுகள் தாக்கியுள்ளன என்று கூறினார். இதுபற்றி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, ரஷியாவுக்கு எதிரான தடையை நீக்குவதோ அல்லது உலகளாவிய கொள்கையை எளிமைப்படுத்துவதோ தகுதியற்ற நிலையில் அந்நாடு உள்ளது என்பதற்கு மற்றொரு இரவு எடுத்துக்காட்டாக உள்ளது என கூறியுள்ளார்.