கோப்புப்படம் 
உலக செய்திகள்

ரஷ்யாவில் கொரோனா உயிரிழப்பு ஒரேநாளில் ஆயிரத்தை தாண்டியது!

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33,208 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மாஸ்கோ,

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

இதுவரை உலக அளவில் 24.10 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 49.07 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது. இதனிடையே ரஷ்யாவில் கொரோனா உயிரிழப்பு இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் ஆயிரத்தை தாண்டி பதிவாகி உள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33,208 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 79,58,384 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 1,002 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 22 ஆயிரத்து 315 ஆக உயர்ந்துள்ளது.

ரஷ்யாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 69,81,907 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 7,54,162 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் மிக்கேல் முரஷ்கோ கூறுகையில், கொரோனா பரவும் அச்சம் காரணமாக பணிக்கு வருவதை தவிர்த்துள்ள மருத்துவர்களும், மருத்துவ ஊழியர்களும் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொண்டு பணிகளுக்கு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.

முன்னதாக அந்நாட்டு அரசு செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோஃப் கூறுகையில், நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலையில், தடுப்பூசி போட வேண்டும் என்பதை மக்களுக்கு தொடர்ந்து விளக்க வேண்டும். தடுப்பூசி போடாதது உண்மையில் பொறுப்பற்றது. அது உயிர் பலியை அதிகமாக்குகிறது என்று அவர் கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு