கீவ்
உக்ரைன் தலைநகரான கீவ் நகரில் ரஷியா நள்ளிரவில் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது.
உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் நகரில் நள்ளிரவில் ரஷியா அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், ஒருவர் பலியாகி உள்ளார். 5 பேர் காயமடைந்தனர். இதுபற்றி கீவ் நகருக்கான ராணுவ நிர்வாகம் வெளியிட்ட செய்தியில், இந்த தாக்குதலால் இரு நாடுகளுக்கும் இடையேயான பகைமை அதிகரிக்கும் என தெரிவித்து உள்ளது.
உக்ரைனின் தலைநகர் கீவ் மீது பல்வேறு ஏவுகணைகள் வீசப்பட்டன என்று உக்ரைனின் விமான படையும் தெரிவித்து உள்ளது. வெடிகுண்டு சத்தங்களும் கேட்டன என தகவல் தெரிவிக்கின்றது.
இரு நாடுகளுக்கும் இடையே சமீப நாட்களாக வான்வெளி தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது. இதில், இரு தரப்பிலும் குடிமக்கள் பலர் பலியாவதும், கட்டிடங்கள் சேதமடைவதும் தொடர்ந்து வருகின்றன.
உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷியா தொடங்கிய போரானது, 5-வது ஆண்டாக தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன.
ரஷியாவுக்கு, நட்பு நாடான வடகொரியா, ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது. போரால் வீரர்கள் உள்பட இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும், வீடுகளை விட்டு அடைக்கலம் தேடி வேறு இடங்களுக்கு தப்பியோடியும் விட்டனர்.
போரை முடிவுக்கு கொண்டு வரும் அமெரிக்காவின் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை. இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான போரானது தொடர்ந்து நடந்து வருகிறது.