மாஸ்கோ,
ரஷியாவின் போர் விமானமான டியூ-22எம்3 ரக விமானம் நீண்ட தூரம் சென்று குண்டு வீசும் திறன் படைத்தது. இந்த விமானம் சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான வான்தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ரஷியாவின் தெற்கு பகுதியில் உள்ள அஸ்டிரகான் பிராந்தியத்தில் இருந்து டியூ-22எம்3 ரக விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. விமானத்தில் 2 விமானிகள் மட்டும் இருந்தனர்.
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது அதன் 2 என்ஜின்களில் ஒன்று திடீரென செயலிழந்தது. இதனால் விமானிகள் விமானத்தை அவசரமாக தரையிறக்க முடிவு செய்தனர். ஆனால் அவர்களின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையைநோக்கி வேகமாக சென்றது.
அதனை தொடர்ந்து, விமானம் தரையை நெருங்கியபோது விமானிகள் இருவரும் அருகில் உள்ள ஒரு வயலில் குதித்தனர். அதன்பின்னர் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானிகள் சாதுரியமாக செயல்பட்டு விமானத்தில் இருந்து குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் ரஷியாவிடம் இருக்கும் ஒரே ஒரு விமானம் தங்கி போர் கப்பலில் பெரும் தீவிபத்து ஏற்பட்டதும், அதில் மாலுமி ஒருவர் பலியானதும் நினைவுகூரத்தக்கது.