சிட்னி,
ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அங்குள்ள மாகாணாங்களின் எல்லைகள் மூடப்பட்டு போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக அங்கு கொரோனா பரவல் தற்போது குறைந்து வருகிறது.
அதிலும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட விக்டோரியா மாகாணத்தில் நேற்றைய தினம் 779 பேருக்கும், நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 961 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் ஆஸ்திரேலியாவில் 51 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசியின் 2 டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்ட உள்நாட்டு எல்லைகளை கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் மீண்டும் திறக்க வேண்டும் என மாகாண மற்றும் பிராந்திய தலைவர்களை அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் வலியுறுத்தியுள்ளார்.
இதில் குயின்ஸ்லாந்து மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா மாகாணங்கள் தங்கள் எல்லைகளை மீண்டும் திறக்க தயக்கம் காட்டி வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் ஆஸ்திரேலியாவில் 80 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் என்பதால், அந்த மாகாண அரசுகள் தங்கள் எல்லைகளை திறக்க முன்வர வேண்டும் எனவும் பிரதமர் ஸ்காட் மாரீசன் கேட்டுக் கொண்டுள்ளார்.