வாஷிங்டன்,
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ரிட்ஜ்கிரெஸ்ட் நகரில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் விரிசல்கள் ஏற்பட்டு சேதமடைந்தன. சாலைகளில் பல்வேறு இடங்களில் பிளவுகள் ஏற்பட்டன. வீடுகளுக்கு நிலத்துக்கு அடியில் கொண்டு செல்லப்படும் சமையல் எரிவாயு குழாயிலும் சேதம் ஏற்பட்டது. இதனால் 2 வீடுகளில் எரிவாயு கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. நிலநடுக்கத்தின் போது அங்குள்ள ஒரு மருத்துவமனை பலத்த சேதம் அடைந்தது.
அமெரிக்காவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினை தொடர்ந்து 159 முறை 2.5 அல்லது அதற்கு மேற்பட்ட ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளன என அமெரிக்க புவியியல் ஆய்வு நிலநடுக்கவியலாளர் ராபர்ட் கிரேவ்ஸ் கூறியுள்ளார்.
இதனால் தீவிர காயங்கள் எதுவும் மக்களுக்கு ஏற்படவில்லை. ஆனால், கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் நிலநடுக்கத்தினால் குலுங்கி கீழே விழுந்துள்ள மற்றும் பிற சேதங்கள் உள்ளிட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், கனடாவில் வான்கோவர் தீவின் வடகடலோர பகுதியில் இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இது ரிக்டர் அளவுகோலில் 4.9 மற்றும் 5 என பதிவாகி உள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக வெளிவரவில்லை.