உலக செய்திகள்

வடகொரியாவில் கொரோனா மீண்டும் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை

வடகொரியாவில் கொரோனா மீண்டும் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பியாங்யாங்,

வடகொரியாவில் முதன்முதலாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கடந்த மாதம் 8-ந் தேதி உறுதியானது. அந்த நாட்டில் கொரோனாவுக்கான தடுப்பூசி இல்லாததால் தொற்று பரவல் ஜெட் வேகத்தில் இருந்தது. எனினும் அந்த நாட்டு அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தீவிரமாக கண்காணித்ததுடன், பாரம்பரிய முறைகளை பின்பற்றி மக்களுக்கு சிகிச்சை அளித்தது. இதனால் கொரோனா உயிரிழப்புகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது.

இந்த சூழலில் அந்த நாடு கொரோனா தொற்றில் இருந்து வெற்றிகரமாக மீண்டு விட்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் நாட்டில் கொரோனா மீண்டும் பரவுவதை தடுக்கவும், குரங்கு அம்மை உள்ளிட்ட தொற்றுநோய் நாட்டுக்குள் நுழைவதை தடுக்கவும் அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவசரகால தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வடகொரியா முழுவதும் தண்ணீர் தொடர்ந்து பரிசோதிக்கப்படுகிறது மற்றும் மக்கள் காட்டு விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கொரோனா வைரஸ் மற்றும் குரங்கு அம்மை போன்ற பிற நோய்களைக் கண்டறிய உதவும் வகையில் ஒரு சிறப்பு சோதனை அமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT