டோக்கியோ,
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த சில மாதங்களாக புயல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் பலத்த காற்று மற்றும் மழைப்பொழிவினால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தின் இறுதியில் உருவான வாம்கோ புயல் வடக்கு கடலோரப் பகுதிகளைத் தாக்கி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மணிக்கு 105 கி.மீ வேகத்தில் வீசிய இந்தப் புயலால் அப்பகுதியில் பலத்த மழைப்பொழிவு ஏற்பட்டது.
இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்புப்படையினர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றி வருகின்றனர். மேலும் வெள்ள பாதிப்பில் சிக்கிய மக்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
வாம்கோ புயலால் பிலிப்பைன்ஸில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 10 பேரைக் காணவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.
மரிகினா மேயர் மார்சி தியோடோரோ செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மோசமான வானிலை காரணமாக மீட்பு பணிகள் தடைபட்டுள்ளதாகவும், மேலும் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளின் கூரைகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த அக்டோபர் மாதத்தில் பிலிப்பைன்ஸில் உருவான டைபூன் கோனி புயலினால் அந்நாடு பலத்த பாதிப்பைச் சந்தித்திருந்தது. இந்தப் புயல் பாதிப்பால் 25 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.