உலக செய்திகள்

பெருவெள்ளத்தால் கடும் சேதம்: உயிரிழப்புகள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது - நேபாள தூதரகம் தகவல்

மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் குறித்தும் அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

காத்மாண்டுவின் அறிவுறுத்தலின்படி இந்திய அரசுடன் தேவைப்படும் எந்தவொரு ஒருங்கிணைப்பு பணிகளுக்கும் உதவ தயாராக உள்ளதாக இந்தியாவில் உள்ள நேபாள தூதரகம் தெரிவித்துள்ளது.

மீட்புப் பணிகள்

இதுதொடர்பாக இந்தியாவில் உள்ள நேபாள தூதரகம் தெரிவித்திருப்பதாவது:-

இன்று காலை நேபாளத்தில் கடுமையான மற்றும் முன்னெப்போதும் இல்லாத வகையிலான திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் துயரமான உயிரிழப்புகள் மற்றும் ஆட்கள் காணாமல் போனது குறித்த தகவல்கள் வந்துள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகள், சாலைகள், பாலங்கள், நீர்மின் நிலையங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

நேபாளத்தின் பாதுகாப்பு முகமைகள், பேரிடர் மேலாண்மை அதிகாரிகள், உள்ளாட்சி நிர்வாகங்கள், சுகாதார சேவைகள் மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகள் முழுவீச்சில் களமிறக்கப்பட்டுள்ளன. தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள், மக்களை வெளியேற்றுதல், அவசர மருத்துவ உதவிகள் மற்றும் நிவாரண பணிகள் ஆகியவை கிடைக்கக்கூடிய அனைத்து வழிகள் மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உயிரிழப்புகள்

ஆறுகளின் நிலை மற்றும் கீழ்மட்டப் பகுதிகளில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் குறித்தும் அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். சூழ்நிலை தொடர்ந்து மாறி வருவதால், உயிரிழப்புகள், காணாமல் போனவர்கள் மற்றும் சேதத்தின் முழு அளவு குறித்த தகவல்கள் இன்னும் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இந்த பேரிடருக்கான காரணமும் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.

வெளிநாட்டு உதவிகள்

நட்பு நாடுகள் மற்றும் சர்வதேச கூட்டாளர்களிடமிருந்து பெறப்பட்ட அனுதாபம், ஒற்றுமை மற்றும் உதவிக்கான முன்மொழிவுகளை நேபாள அரசு பாராட்டுகிறது. வெளிநாட்டு உதவிகள் தேவைப்படுவது குறித்தோ அல்லது அவற்றை ஏற்று பயன்படுத்துவது குறித்தோ, காத்மாண்டுவில் உள்ள நேபாள அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வழிமுறைகள் மூலம் மையப்படுத்தப்பட்ட முறையில் மதிப்பீடு செய்யப்பட்டு ஒருங்கிணைக்கப்படுகிறது.

கூடுதல் விவரங்கள்

உறுதிப்படுத்தப்பட்டதும் கூடுதல் தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும். புதுடெல்லியில் உள்ள நேபாள தூதரகம், நேபாள அரசுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது. மேலும் காத்மாண்டுவின் அறிவுறுத்தலின்படி இந்திய அரசுடன் தேவைப்படும் எந்தவொரு ஒருங்கிணைப்புப் பணிகளுக்கும் உதவத் தயாராக உள்ளது.

சரிபார்க்கப்பட்ட தகவல்கள் கிடைக்கும்போது கூடுதல் விவரங்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.