உலக செய்திகள்

போர்க்களத்தின் நடுவே சிக்கி தவிக்கும் கப்பல்கள்: உதவி கோரும் மாலுமிகள்; அனுமதி மறுக்கும் துறைமுகங்கள்

கப்பல்களில் உள்ள மாலுமிகளுக்குக் குடிநீர் மற்றும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் நடத்தி வரும் போர் இன்று 21-வது நாளை எட்டி உள்ளது. இந்த போரில் தனது உச்சபட்ச தலைவர் மற்றும் மூத்த தலைவர்களை இழந்த ஈரான் இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகள் மீதும் ஆவேச பதிலடியை கொடுத்து வருகிறது.

இந்தநிலையில், ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ள நிலையில், 3,200 வணிகக் கப்பல்கள் வெளியேற முடியாமல் அங்கேயே சிக்கியுள்ளன. போர் தொடர்ந்து நடந்து வருவதால் பாரசீக வளைகுடா பகுதியில் நடுக்கடலில் சிக்கி தத்தளிக்கும் கப்பல்களில் உள்ள மாலுமிகளுக்குக் குடிநீர் மற்றும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சரி நிலப்பகுதிக்கு சென்று உணவு, தண்ணீர் கிடைக்கும் என்று எதிர்பார்த்து உதவி கேட்டால், துறைமுகங்களைத் தொடர்பு கொள்ளும் வணிகக் கப்பல்களைப் பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதிக்க அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்காகச் சிவிலியன் மாலுமிகள் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாலுமிகள் கப்பல்களைக் கைவிட்டு வெளியேறத் தொடங்கினால், கடலில் தத்தளிக்கும் இந்த ரசாயன மற்றும் எண்ணெய் கப்பல்களால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

2021-ல் சூயஸ் கால்வாயில் 400 கப்பல்கள் முடங்கியதே பெரிய செய்தியாகப் பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது 3,200 கப்பல்கள் போர்க்களத்தின் நடுவே சிக்கியுள்ளன, இது உலகப் பொருளாதாரத்தையே சீர்குலைக்கும் என அஞ்சப்படுகிறது.மேலும் இது சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.