உலக செய்திகள்

அமெரிக்காவில் அதிர்ச்சி: 2 மகன்களை கொலை செய்த இந்திய வம்சாவளி பெண்

அவருடைய 2 மகன்களும் படுக்கையறையில் சுயநினைவற்று கிடந்துள்ளனர்.

நியூயார்க்,

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தின் ஹில்ஸ்பாரோ நகரை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மனைவி பிரியதர்ஷினி நடராஜன் (வயது 35). இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்த தம்பதிக்கு 5 மற்றும் 7 வயதுடைய 2 மகன்கள் இருந்தனர்.

இந்நிலையில் வேலை முடிந்து நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பிய கணவர் நடராஜனுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய 2 மகன்களும் படுக்கையறையில் சுயநினைவற்று கிடந்துள்ளனர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

அவர்கள் வந்து, விசாரித்து இருக்கின்றனர். மகன்களை, மனைவி ஏதோ செய்து விட்டார் என போலீசாரிடம் கூறியிருக்கிறார். அவர்களை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். எனினும், 2 பேரும் உயிரிழந்து விட்டனர் என டாக்டர்கள் கூறினர்.

இதனை தொடர்ந்து போலீசார், 2 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். சட்டவிரோத வகையில் ஆயுதங்களை பதுக்கி வைத்தல், கொலை செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பிரியதர்ஷினியை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT