கொழும்பு,
இலங்கை அதிபர் தேர்தல், அடுத்த மாதம் 16-ந் தேதி நடக்கிறது.
இந்த தேர்தலில், எதிர்க்கட்சிகளின் முக்கிய வேட்பாளராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் அவரது தம்பி கோத்தபய ராஜபக்சே போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சி சார்பில் முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகனான சஜித் பிரேமதாசா களத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். அதிபர் சிறிசேனா இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
இந்த நிலையில் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சி, கோத்தபய ராஜபக்சேவுக்கு தனது ஆதரவை அறிவித்துள்ளது. இதையொட்டி அந்த கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகரா, கொழும்பு நகரில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், அதிபர் தேர்தலில் நாங்கள் கோத்தபய ராஜபக்சேவுக்கு ஆதரவு அளிக்கிறோம் என்று கூறினார்.