சியோல்
தென்கொரியாவின் தேஜியோன் நகரில் ஹன்வா வான்வெளி மையம் சார்பில் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், ராக்கெட் பாகங்கள் உற்பத்தி செய்யும் பிரிவில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர். 2 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் ஒருவருக்கு கடுமையான தீக்காயம் ஏற்பட்டு உள்ளது.
அவர்கள் இரண்டு பேரும் ஆலையில் இருந்து அவர்களாகவே வெளியேறி உள்ளனர். இந்த வெடிவிபத்துக்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. அதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.
ராக்கெட் பாகங்கள் உற்பத்தி செய்யும் உபகரணங்களில் இருந்த வெடிக்க கூடிய பொருட்களை சுத்தம் செய்ய தண்ணீர் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அப்போது இந்த வெடிவிபத்து ஏற்பட்டு இருக்க கூடும் என தெரிகிறது. இதனால், ஹன்வா வான்வெளி மையத்தின் பங்குகள் நண்பகலில் 2.8 சதவீதம் சரிவடைந்தன.
அதன் மற்றொரு துணை நிறுவனங்களில் ஒன்றான ஹன்வா கார்ப் நிறுவன பங்குகளும் 3.4 சதவீதம் சரிவடைந்திருந்தன. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக உதவி செய்யும்படியும், வெ பற்றி விசாரிக்கும்படியும் தென்கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் உத்தரவிட்டு உள்ளார்.