Image Courtesy: AFP 
உலக செய்திகள்

தென்கொரிய அதிபர் உக்ரைன் பயணம்

தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் உக்ரைன் சென்றுள்ளார். அங்கு உக்ரைனுக்கு தனது ஆதரவை வெளிப்படையாக அறிவித்தார்.

பொருளாதார உதவிகள்

உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் சேர முயன்றதற்காக உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. 17 மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய இந்த போர் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதலில் இந்த போரால் உக்ரைனுக்கு பெருமளவில் சேதம் ஏற்பட்டது. இதனையடுத்து உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் சப்ளை, பொருளாதார உதவிகளை செய்து வருகின்றன.

நேட்டோ உச்சிமாநாடு

இந்தநிலையில் நேட்டோ அமைப்பின் உச்சி மாநாடு பின்லாந்து தலைநகர் வில்னியசில் நடைபெற்றது. இதில் நேட்டோ உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது தென்கொரியா அதிபர் யூன் சுக் இயோலும் தனது மனைவி கிம் கியோன் ஹீயுடன் சென்றிருந்தார். இதனையடுத்து அதிபர் யூன் சுக் இயோல் அங்கிருந்து திடீரென உக்ரைனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். போர் தொடங்கிய பிறகு யூன் சுக் இயோல் உக்ரைன் செல்வது இதுவே முதல்முறை ஆகும். அப்போது ரஷியாவுக்கு எதிரான போரில் தனது ஆதரவை அவர் வெளிப்படையாக அறிவித்தார்.

ராணுவ ஆதரவை வழங்க வேண்டும்

ஆசிய நாடுகளில் வளர்ந்து வரும் ஆயுத ஏற்றுமதி நாடான தென்கொரியா தீவிர மோதலில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு ஆயுதங்களை வழங்குவதில்லை என்ற கொள்கையில் நீண்ட காலமாக உள்ளது. ஆனால் கடந்த ஜனவரி மாதம் நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தென்கொரியா சென்றபோது உக்ரைனுக்கு நேரடி ராணுவ ஆதரவை வழங்க வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்.

மேலும் உக்ரைன் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததையடுத்து சமீபத்தில் கண்ணிவெடி அகற்றும் கருவிகள், ஆம்புலன்ஸ்கள் போன்ற ராணுவம் அல்லாத உதவிகளை தென்கொரியா வழங்கியது. இந்தநிலையில்தான் தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் உக்ரைன் சென்றுள்ளார்.

SCROLL FOR NEXT