ஜப்பான் -தென்கொரிய இளைஞர்கள் 
உலக செய்திகள்

வேலைக்காக ஜப்பானுக்கு படையெடுக்கும் தென்கொரிய இளைஞர்கள்!

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி தென்கொரியாவில் இளைஞர்களுக்கான வேலையின்மை விகிதம் 7 சதவீதமாக உயர்ந்துள்ளது.

டோக்கியோ,

தென்கொரிய இளைஞர்கள் வேலைக்காக ஜப்பானை நோக்கி படையெடுத்து செல்கின்றனர்.

தென்கொரியாவில் வேலையின்மை

தென்கொரியாவில் கடுமையான வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது. இதன் காரணமாக, அந்நாட்டு இளைஞர்கள் ஜப்பானில் உள்ள நிறுவனங்களில் வேலை தேடி பெருமளவில் குடியேறி வருகின்றனர். சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி தென்கொரியாவில் இளைஞர்களுக்கான வேலையின்மை விகிதம் 7 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், அங்குள்ள இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற தொடக்க நிலை வேலைகள் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.

ஜப்பானில் சாதகமான சூழல்

மறுபுறம், ஜப்பான் நாடு தற்போது தீவிர தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. இந்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஜப்பானிய நிறுவனங்கள் தென்கொரிய பட்டதாரிகளை ஆர்வமுடன் வேலைக்கு எடுத்து வருகின்றன. இதற்காக தென்கொரியாவின் சியோல் நகரில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் சேவைத்துறைகளில் ஜப்பான் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை நேரடியாக தேர்வு செய்கின்றன. முன்னனுபவம் இல்லாத புதிய பட்டதாரிகளுக்கும் முழுமையான பயிற்சியளித்து பணியமர்த்த ஜப்பான் நிறுவனங்கள் தயாராக இருப்பது, தென்கொரிய இளைஞர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.