பீஜிங்,
நமது பூமியை நிலவு நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள சராசரி தூரம் சுமார் 3 லட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் ஆகும். நிலவு பூமிக்கு மிக அருகில் வரும்போது உள்ள தூரம்(Perigee) சுமார் 3,63,300 கி.மீ ஆகும். அதே போல், நிலவு பூமியிலிருந்து மிகத் தொலைவில் செல்லும்போது உள்ள தூரம்(Apogee) சுமார் 4,05,500 கி.மீ ஆகும்.
இந்நிலையில், சீனாவின் ஸியான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வான்வெளித் துறை ஆய்வாளர்கள், நிலவின் சிக்கலான ஈர்ப்பு விசை குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர். அந்த ஆய்வின் முடிவில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூமிக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட விண்வெளி பகுதி எதிர்காலத்தில் வல்லரசு நாடுகளின் போர்க்களமாக மாறக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலவின் சிக்கலான ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி விண்கலன்கள் மறைந்து தாக்குதல் நடத்தவும், முக்கிய விண்வெளிப் பாதைகளைக் கைப்பற்றி எதிரி நாட்டு விண்கலன்களை வழிமறிக்கவும் முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மண்டலத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் விண்வெளியின் முழு அதிகாரத்தையும் தன்வசப்படுத்தி எதிரிகளை அச்சுறுத்த முடியும் என ஆய்வின் முதன்மை ஆசிரியர் டாங் ஜாஹுய் விளக்கமளித்துள்ளார். இந்த ஆய்வறிக்கை தற்போது சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வருகிறது.