உலக செய்திகள்

படகு பழுதானதால் துபாயில், நடுக்கடலில் தத்தளித்த ஸ்பெயின் நாட்டு குடும்பத்தினர்; போலீஸ் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்

துபாய் நகரின் ஜுமைரா பகுதியில் உள்ள கடல் பகுதிக்கு படகு ஒன்றின் மூலம் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 6 பேர் சென்றனர்.

அவர்கள் கடலின் அழகை ரசித்து மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டு சென்றனர். அப்போது திடீரென அவர்கள் சென்ற படகு பழுதாகி நடுக்கடலில் நின்றது. அந்த இடம் மிகவும் ஆபத்தான பகுதி என்பதால் படகில் இருந்தவர்கள் என்ன செய்வதென தெரியாமல் திகைத்தனர். பின்னர் அவர்கள் போலீசின் உதவியை நாடினர். அதன்பேரில் மீட்பு குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். இதனையடுத்து பழுதான படகில் இருந்த 6 பேரும் போலீசாரின் மீட்பு படகு மூலம் கடற்கரைக்கு பத்திரமாக மீட்டு அழைத்து வரப்பட்டனர். பழுதான படகையும் போலீசார் கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.

இது குறித்து துபாய் கடல் பகுதி மீட்பு குழுவின் தலைவர் அலி அப்துல்லா அல் நக்பி கூறுகையில், கடல் பகுதிக்கு செல்பவர்கள் போலீசாரின் உதவி செயலியை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த செயலி மூலம் ஆபத்து ஏற்பட்டாலோ, படகு பழுதாக இருந்தாலோ அதன் மூலம் தகவல் தெரிவித்தால் மீட்பு குழுவின் மூலம் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றார்.

பழுதான படகில் இருந்து மீட்கப்பட்ட குடும்பத்தினர் துபாய் போலீசாரின் விரைவான உதவிக்கு நன்றி தெரிவித்தனர்.