கொழும்பு,
இலங்கையில் உள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் இதுவரை 4 சிறை அதிகாரிகள் உள்பட 27 பேர் பலியானதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வன்முறையின்போது பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட சுமார் 700 கைதிகளில் பல வெளிநாட்டு கைதிகளும் அடங்குவர். இந்த சம்பவத்தை விசாரித்து இது போன்ற சம்பவம் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் மூவர் கொண்ட விசாரணை குழுவை அமைத்து இலங்கை அரசு அறிவித்துள்ளது.
நேற்று முன்தினம்,நேற்றும் கைதிகளின் இரு குழுக்ளுக்கு இடையே தொடங்கிய மோதல்கள் இன்றும் அரங்கேறியது. நிலைமை மோசமானதைத் தொடர்ந்து அதனைக் கட்டுக்குள் கொண்டுவரவும், தாக்குதலைத் தடுக்கவும் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை சிறைக் கைதிகளுக்குள் நடைபெற்ற மோதல் அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்றைய மோதல் தீவிரமான வன்முறைச் சம்பவமாக மாறியுள்ளது.
கலவரம் தொடர்பாக விசாரிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரி ஏசி கஜநாயகே தெரிவித்துள்ளார். சிறைத்துறை தலைமை ஆணையரின் உத்தரவின் பேரில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறை சார்பில் தனியே விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சட்டத்துறை மந்திரி ஹர்ஷன நாணயக்கார இந்த மோதல்கள் குறித்து விரிவான அறிக்கை ஒன்றை தயார் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே இலங்கையில் அண்மை காலமாக இல்லாத வகையில் நிகழ்ந்த மிக மோசமான சிறைக் கலவரத்தில் 27 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் சட்டத்துறை மந்திரி ஹர்ஷன நாணயக்கார அதற்குத் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்றுள்ளார்.
தற்போது நிலைமை முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட நாணயக்கார, உயிரிழப்புகளை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்றும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். வன்முறைக்கு வழிவகுத்திருக்கக்கூடிய குறைபாடுகளை விசாரணை குழு கண்டறியும் என்று நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்தார்.
நீதிமன்ற விசாரணையை நடத்துவதற்காக நீர்கொழும்பு நீதிபதி ஷிரானி பெரேரா இன்று சிறைசாலையை பார்வையிட்டார், அதே நேரத்தில் மனித உரிமைகள் ஆணையமும் அந்த வளாகத்தை ஆய்வு செய்தது. மோதல்கள் வெடித்தபோது, சிறையில் சுமார் 1,800 கைதிகள் அடைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.