உலக செய்திகள்

இலங்கையில் இடைக்கால அரசு அமைக்கும் யோசனையை மகிந்த ராஜபக்சே நிராகரிப்பு

இலங்கையில் இடைக்கால அரசு அமைக்கும் யோசனையை பிரதமர் மகிந்த ராஜபக்சே நிராகரித்தார்.

தினத்தந்தி

இடைக்கால அரசு

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து வருவதால், அரசுக்கு எதிரான போராட்டமும் நீடிக்கிறது. இந்த நெருக்கடிக்கு அரசின் கொள்கைகளே காரணம் எனக்கூறி அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவிவிலக வேண்டும் என எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் போராடி வருகின்றனர்.

இலங்கையின் ஆளும் கூட்டணியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் விலகிய 40-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள், அங்கு அனைத்துக்கட்சிகளும் இணைந்த இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

இடைக்கால அரசால் என்ன பயன்?

ஆனால் இந்த யோசனையை பிரதமர் மகிந்த ராஜபக்சே நிராகரித்து உள்ளார். இதுதொடர்பாக வானொலி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், வெவ்வேறு கொள்கைகளுடன் ஒருவரையொருவர் முகம் பார்த்து பேச முடியாத கட்சிகளைக்கொண்டு இடைக்கால அரசு அமைப்பதால் என்ன பயன்? எந்த பயனும் ஏற்படாததுடன், இது சாத்தியமும் இல்லாதது. அப்படி இடைக்கால அரசு தேவை என்றால் அது எனது தலைமையில்தான் நடக்க வேண்டும் என தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, மக்கள் (போராட்டக்காரர்கள்) பொறுமையுடன் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தைக்கு விருப்பம் இல்லை என்றால் தொடர்ந்து போராட்டம் நடத்தலாம் என்றும் கூறினார்.

பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு தன்னிடம் யாரும் தனிப்பட்ட முறையில் கூறவில்லை என்று தெரிவித்த ராஜபக்சே, அப்படி எனது ராஜினாமா குறித்த கோரிக்கை இருந்தால் கூட அது பெரும்பான்மையாக இருக்காது என்றும், அது நாட்டின் அரசியல் வரலாறு தெரியாத ஒரு சிறு குழுவாகவே இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்தியா கடன் உதவி

இதற்கிடையே இலங்கைக்கு எரிபொருள் வாங்க ரூ.3 ஆயிரத்து 750 கோடி கடன் வழங்க இந்தியா சம்மதித்து இருப்பதாகவும், மேலும் ரூ.7 ஆயிரத்து 500 கோடி கடன் பெற பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இலங்கை நிதி மந்திரி அலி சப்ரி கூறியுள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க குறைந்தபட்சம் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.30 ஆயிரம் கோடி) தேவைப்படுவதாக கூறியுள்ள அலி சப்ரி, இதற்காக உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களுடனும் சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுடனும் நிதி உதவிக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்