கொழும்பு,
இலங்கையில் 225 உறுப்பினர்களை கொண்ட அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு வருகிற 5-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதியே நடத்த திட்டமிடப்பட்டிருந்த இந்தத் தேர்தல் கொரோனா தொற்று காரணமாக 2 முறை ஒத்தி வைப்புக்கு பிறகு தற்போது நடக்க இருக்கிறது.
இலங்கையில் இன்னமும் கொரோனா பாதிப்பு குறையாததால் மக்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு தயக்கம் காட்டலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குச் சாவடிகளும் பாதுகாப்பானவை என்றும், எனவே மக்கள் கொரோனா குறித்த அச்சமின்றி வாக்களிக்கலாம் என்றும் இலங்கைத் தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் நடக்க இருக்கும் தேர்தலில் மக்கள் எந்தவித பயமுமின்றி அவர்களின் வாக்கை செலுத்தலாம். அதேசமயம் வாக்குச்சாவடிகளில் அறிவிக்கப்பட்டுள்ள சுகாதார கட்டுப்பாடுகளை வாக்காளர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். கடந்த தேர்தல்களில் செயல்படுத்தப்பட்ட சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்போதைய புதிய நடவடிக்கைகளுடன் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறினார்.
நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல், தேர்தல் ஆணையத்தின் தலைவராக இருந்து தேசப்பிரியா நடத்தும் கடைசித் தேர்தல் என்பதும், அவர் வருகிற செப்டம்பர் மாதம் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.