உலக செய்திகள்

முதல் அமைச்சர் விஜய்க்கு இலங்கை அதிபர் வாழ்த்து

தமிழக முதல் அமைச்சராக விஜய் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்றுள்ள நடிகர் விஜய்க்கு, இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகே வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

“தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராகப் பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாச்சாரம், தொழில்முனைவு மற்றும் தலைமுறை தலைமுறையாக தொடரும் மக்கள் இடையிலான ஆழமான உறவுகள் மூலம் ஒன்றிணைந்துள்ளன.இலங்கையும் இந்தியாவும் தொடர்ந்து மிக நெருக்கமான உறவுகளையும், வலுவான கூட்டாண்மையையும் வளர்த்து வருகின்றன. இதனால் நமது எதிர்காலம் பெரும் பொருளாதார நம்பிக்கைகளையும் வாய்ப்புகளையும் கொண்டதாக உள்ளது.

இந்தியா–இலங்கை இடையிலான வலுவான கூட்டாண்மையை மேலும் பலப்படுத்தி, செழிப்பு மற்றும் முன்னேற்றத்தை நோக்கி இணைந்து செயல்பட ஆவலுடன் காத்திருக்கிறேன்.தங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் அனைத்து வெற்றிகளும் கிடைக்க வேண்டும் என இலங்கை மக்கள் சார்பாக வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.