கோப்புப்படம் 
உலக செய்திகள்

மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே வெளிநாடு செல்ல தடை நீட்டிப்பு..!!

மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே வெளிநாடு செல்ல தடையை நீட்டித்து இலங்கை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு,

இலங்கையை சேர்ந்த சிலோன் வர்த்தக கூட்டமைப்பு முன்னாள் தலைவர் சந்திர ஜெயரத்னே உள்ளிட்ட சிலர் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தனர்.

அதில், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபக்சே, மத்திய வங்கி முன்னாள் கவர்னர் அஜித் நிவர்டு கப்ரால் ஆகியோர்தான் காரணம் என்றும், அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி இருந்தனர்.

கடந்த மாதம் 15-ந் தேதி, இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மேற்கண்ட 3 பேரும் நாட்டை விட்டு வெளியேற ஜூலை 28-ந் தேதிவரை தடை விதித்தது. பிறகு இத்தடை ஆகஸ்டு 2-ந் தேதிவரையும், 11-ந் தேதிவரையும் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், இலங்கை சுப்ரீம் கோர்ட்டு நேற்று மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட 3 பேரும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தடையை செப்டம்பர் 5-ந் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டது.