உலக செய்திகள்

அணு ஆயுத நாடு என்ற நிலை மாற்ற முடியாதது: அமெரிக்காவுக்கு வடகொரியா பதிலடி

அணு ஆயுத நாடாக உள்ள வடகொரியாவின் நிலை மாற்ற முடியாதது என்றும், பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கு அதன் அணு ஆயுதத் திட்டம் அவசியம் என்றும் வடகொரியா தெரிவித்துள்ளது.

பியாங்யாங்,

ஈரான் - அமெரிக்கா போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்க போர் தொடுக்க மைய காரணமாக விளங்கியது அந்த நாடு அணு ஆயுதம் தயாரிக்க முயற்சி செய்தது என்பது டிரம்பின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியை கைவிட தயராக இருப்பதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வரும் நிலையில், தற்போது தனது பார்வையை வடகொரியா பக்கம் அமெரிக்கா திருப்பியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் முத்தரப்பு சந்திப்பு நடைபெற்றது. இதில், “கொரிய தீபகற்பத்தை முழுமையாக அணு ஆயுதமற்ற பகுதியாக மாற்ற வேண்டும்”என்ற உறுதியை மூன்று நாடுகளும் மீண்டும் வலியுறுத்தின.

இதற்கு பதிலளிக்கும் வகையில், வடகொரியா கூறியிருப்பதாவது: “வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் முன்வைக்கும் அர்த்தமற்ற பேச்சுகளால், அணு ஆயுத நாடாக உள்ள வடகொரியாவின் நிலையை ஒருபோதும் மாற்ற முடியாது. அணு ஆயுத ஒழிப்பு என்பது ஏற்கனவே முடிவுக்கு வந்த விவகாரம். அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா எவ்வளவு முயன்றாலும், அணு ஆயுத நாடாக உள்ள வடகொரியாவின் தற்போதைய நிலையை மாற்ற முடியாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.