உலக செய்திகள்

ஹார்மூஸ் ஜலசந்தி எதிரிகளுக்கு மட்டுமே மூடப்பட்டு உள்ளது: ஈரான்

அமெரிக்கா-ஈரான் அமைதி பேச்சுவார்த்தையில், இந்தியா ஒரு முக்கிய பங்கு வகிக்க சாத்தியம் உண்டா? என்ற கேள்விக்கு அவர் பதிலளித்து உள்ளார்.

புதுடெல்லி

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானில் ஆண்கள், பெண்கள் என இரண்டாயிறத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேற்காசியாவில் காணப்படும் நீண்டகால மோதல் போக்கால், எரிபொருள் தட்டுப்பாடு பரவலாக அதிகரித்து காணப்படுகிறது.

ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதுடன், அதனை கடந்து செல்லும் எதிரி நாடுகளின் கப்பல்களை தாக்க கூடிய ஆபத்தும் காணப்படுகிறது. தவிர, ஜலசந்தியை கடந்து செல்லும் கப்பல்களுக்கு வரி விதிக்கவும் ஈரான் சார்பில் திட்டமிடப்பட்டு வருகிறது. இது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் உள்ள ஈரான் உச்ச தலைவரின் பிரதிநிதியான டாக்டர் அப்துல் மஜீத் ஹகீம் இலாஹி செய்தியாளர்களிடம் இன்று பேசினார். அவர் பேசும்போது, ஹார்மூஸ் ஜலசந்தி எதிரிகளுக்கே மூடப்பட்டு உள்ளது. மற்ற நாடுகளின் கப்பல்கள் அதன் வழியே கடந்து செல்லலாம் என்றார். சில இந்திய கப்பல்கள் அதன் வழியே கடந்து சென்றுள்ளன. அது தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

போர் முடிவுக்கு வருவதற்கான சாத்தியம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், அது போரை தொடங்கிய நாடுகளை சார்ந்தது என்றார். அவர்கள் தாக்குதலை தொடங்கி, மக்கள் பலரை கொன்றனர். இதனை அவர்கள் நிறுத்தினால், போர் முடிந்து விடும்.

ஈரான் மீது நடக்கும் தாக்குதல்கள் நின்றால், போர் முடிவுக்கு வரும் என்றார். அமெரிக்கா-ஈரான் அமைதி பேச்சுவார்த்தையில், இந்தியா ஒரு முக்கிய பங்கு வகிக்க சாத்தியம் உண்டா? என்ற கேள்விக்கு போரை நிறுத்த அனைத்து நாடுகளும் நல்ல முறையில் பங்காற்ற முடியும் என்று அவர் கூறினார்.