உலக செய்திகள்

சிரியாவில் குழந்தைகளை குறிவைத்து ரசாயனத் தாக்குதல் உயிருக்கு போராடும் பரிதாபம்

சிரியாவில் அரசு குழந்தைகளை குறிவைத்தே ரசாயனத் தாக்குதல் நடத்தப்படுவதும் தெரியவந்துள்ளது. இதனால் ஆயிரகணக்கான குழந்திகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். #Syriawar #Gasattack

டமாஸ்கஸ்

சிரியா நாட்டில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டையில், சமீபத்திய தாக்குதல்களின் காரணமாக இதுவரை 600 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த போரின் நிலை குறித்து சமூக வலைதளங்களில் வெளியான படங்கள் இதயத்தை கலங்கச் செய்யும் வகையில் உள்ளன. போர் நிறுத்தம் என்று கூறப்பட்டாலும் கடந்த சில நாட்களாக அரசுப்படையினர் தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள கவுட்டா என்று பகுதி மீது தாக்குதல் நடத்தியது. கடந்த 2013-ம் ஆண்டுக்கு பிறகு இப்படி ஓர் அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் கடந்த 7 நாட்களாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர். சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, நிகழ்த்தப்பட்டு வரும் விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களின் 500-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக போர் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

3000 பேர் வரை மோசமான காயங்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர், இறந்தவர்களில் பெரும்பாலானோர் 15 வயதுக்கும் குறைவான சிறுவர், சிறுமிகளே.

குழந்தைகளை குறிவைத்தே ரசாயன தாக்குதல் நடத்தப்படுவதும் தெரியவந்துள்ளது. இப்புகைப்படங்கள் வெளியாகி பார்ப்போரை கண்கலங்கச் செய்கின்றன.

இந்த போரில் இறந்த நபர்களில் 65 சதவிகிதம் பேர் குழந்தைகள். மேலும் காயம் அடைந்த 80 சதவிகிதம் பேர் குழந்தைகள். உயிருக்கு போராடும் முக்கால்வாசி பேர் குழந்தைகள். அங்கே அகப்பட்டு இருக்கும் 3,98,859 பேரில் 50 சதவிகிதம் பேர் குழந்தைகளாக இருக்கலாம் என்று ஐநா தெரிவித்து இருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றம், கடந்த சனிக்கிழமை சிரியாவில் தற்காலிக போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளபோதிலும், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளின் மீது சிரியா அரச படைகள் விமானத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.