டோக்கியோ,
ஜப்பானின் வரலாற்று சிறப்புமிக்க புத்தரின் பாதச்சுவட்டு கல்லின் மீது கிளிசரின் திரவத்தை ஊற்றி சேதப்படுத்திய வழக்கில், தைவானை சேர்ந்த பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் டிசாய் ஜென் ஜப்பானிய போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜப்பான் நாரா நகரில் உள்ள உலக புகழ்பெற்ற பழமையான பௌத்த கோவிலில், கி.பி. 753-ஆம் ஆண்டை சேர்ந்த புத்தரின் பாதச்சுவடுகள் செதுக்கப்பட்ட கல் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.
இது ஜப்பானின் மிக முக்கிய தேசிய பொக்கிஷமாக பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த கோவிலுக்கு சுற்றுலா வந்த தைவான் நடிகையும், டிவி தொகுப்பாளருமான டிசாய் ஜென், யாரும் பார்க்காத நேரத்தில் புத்தர் பாதத்தின் மீது கிளிசரின் திரவத்தை ஊற்றிவிட்டு தைவானுக்கு தப்பியோடினார்.
கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த ஜப்பானிய போலீசார் குற்றவாளியை அடையாளம் கண்டனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் மீண்டும் ஜப்பானின் கான்சாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கியபோது, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் கைதான டிசாய் ஜென் கொடுத்துள்ள வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், "எனக்கு ஆன்மீக ரீதியாகவோ அல்லது உணர்வுப்பூர்வமாகவோ ஈர்ப்பை ஏற்படுத்தும் பொருட்கள் மீது, புனித எண்ணெய் அல்லது திரவங்களை ஊற்றி பிரார்த்தனை செய்வது எனது வழக்கம். அந்த விசித்திர நம்பிக்கையின் அடிப்படையில்தான் புத்தர் பாதத்தின் மீதும் கிளிசரின் ஊற்றினேன்" எனத் தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் கலாச்சார சொத்துக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அவரிடம், போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் உலகெங்கும் உள்ள பௌத்த மதத்தினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.