லாகூர்
பாகிஸ்தானின் தென்மேற்கு பலூசிஸ்தான் மாகாணத்தில் தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் பலர் செயல்படுகின்றனர் என பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மாகாண தலைநகர் குவெட்டாவில் அதிரடி சோதனை மற்றும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இதில், தடை செய்யப்பட்ட இயக்கத்தின் பயங்கரவாதிகள் 35 பேரை படையினர் படுகொலை செய்தனர். இதனை முதல்-மந்திரியின் ஊடக மற்றும் அரசியல் விவகாரத்திற்கான உதவியாளர் ஷாகித் ரிந்த் கூறியுள்ளார்.
அப்போது, பயங்கரவாதிகளின் பல்வேறு பதுங்கு குழிகளும், பயிற்சி முகாம்களும் மற்றும் ஆயுத தளவாட சேமிப்பு கிடங்குகளும் தாக்கி அழிக்கப்பட்டன. இதுதவிர, 3 முக்கிய தளபதிகளும் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் நடத்தும் விசாரணையின் அடிப்படையில் இந்த சோதனையானது தொடரும் என ரிந்த் கூறியுள்ளார்.
தொடர்ந்து, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்படும் என்றும் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் இணைந்து இந்த பகுதியில் அமைதியையும், நிலைத்தன்மையையும் உறுதி செய்வார்கள் என்றும் அவர் கூறினார்.