தாய்லாந்து இளவரசி 
உலக செய்திகள்

4 ஆண்டுகளாக கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி காலமானார்

இளவரசி பஜ்ரகித்தியபா 2022ஆம் ஆண்டு தனது நாய்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து கோமா நிலைக்கு சென்றார்.

தாய்லாந்து இளவரசி

தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்னின் மூத்த மகள் பஜ்ரகித்தியபா (வயது 47). இளவரசியான இவர் தாய்லாந்து நாட்டு சட்டத்தின்படி அரியணை ஏறுவதற்குத் தகுதி பெற்றவர்களில் ஒருவர். இவர் ஐ.நா.சபையில் பணியாற்றியதுடன், தாய்லாந்து சிறைகளில் உள்ள பெண் கைதிகளின் உரிமைகளுக்காகத் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டவர்.

உயிர் பிரிந்தது

இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நகோன் ரட்சசிமா மாகாணத்திற்கு பயணம் மேற்கொண்ட அவர், ராணுவம் நடத்தும் போட்டிகளுக்காக தனது நாய்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து கோமா நிலைக்கு சென்றார். அவருக்கு அரண்மனையில் வைத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவரது உடல்நிலை தேறவில்லை.

இதற்கிடையே வயிற்றுத் தொற்றால் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இதையடுத்து பாங்காக் சுலாலோங்கோர்ன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இளவரசி காலமானதை அரசு உறுதி செய்தது.

கிராண்ட் பேலஸ்

இளவரசி பஜ்ரகித்தியபா உடலிற்கு பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது இழப்பு தாய்லார்து மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பாங்காக் கிராண்ட் பேலஸில் மிக உயரிய அரசு மரியாதையுடன் இளவரசியின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.