உலக செய்திகள்

தாய்லாந்து: சரக்கு ரெயில்-பஸ் மோதல்; 8 பேர் பலி

ரெயில் மோதிய வேகத்தில் அந்த பஸ், தீப்பிடித்து எரிய தொடங்கியது.

பாங்காக்

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் சரக்கு ரெயில் செல்லும் வழியில் இன்று மதியம் பஸ் குறுக்கே சென்றபோது பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பஸ்சை சிறிது தூரத்திற்கு ரெயில் இழுத்து சென்றது. இதன் தொடர்ச்சியாக வேறு சில வாகனங்களின் மீதும் அந்த ரெயில் மோதியுள்ளது.

இந்த சம்பவத்தில், அந்த வாகனங்களில் உள்ளவர்கள் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். அவசரகால பணியாளர்கள் தகவல் அறிந்து உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்றனர். எனினும், ரெயில் மோதிய வேகத்தில் அந்த பஸ், தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதனால், பயணிகளை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டது. முதலில் தீயை அணைக்கும் பணி நடந்தது. இதன்பின்னர், பஸ்சில் சிக்கிய பணிகளை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், விபத்து மற்றும் தீயில் சிக்கி 8 பேர் பலியாகி உள்ளனர் என தெரிய வந்தது. 20 பேர் வரை காயமடைந்து உள்ளனர்.

அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால், அந்த பகுதியில் ரெயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. அதனை சீர் செய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.