உலக செய்திகள்

ஏமனில் கடும் போர் - 58 பேர் பலி

ஏமனில் நடைபெற்றுவரும் கடுமையான போரில் 58 பேர் பலியாயினர்.

ஏடன்,

ஏமன் நாட்டில் அதிபர் அப்துரப்பா மன்சூர் ஹாதி படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் 2015-ம் ஆண்டு, மார்ச் மாதம் 22-ந்தேதி உள்நாட்டுப்போர் மூண்டது. 4-வது ஆண்டாக அந்தப் போர் நீடிக்கிறது.

அதிபர் படைகளுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படைகள் களத்தில் குதித்துள்ளன.

அங்குள்ள செங்கடல் துறைமுக நகரமான ஹொதய்தா, 2014-ம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்து வருகிறது. அங்கு 6 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.

அந்த நகரை மீட்பதற்காக அதிபர் ஆதரவு படைகள், சவுதி கூட்டுப்படைகள் உதவியுடன் களத்தில் குதித்து கடந்த ஒரு வாரமாக மூர்க்கத்தனமாக சண்டையிட்டு வருகின்றன. ஒரு பக்கம் தரை வழி தாக்குதலும், இன்னொரு பக்கம் வான்தாக்குதலும் நடந்து வருகிறது. நேற்று நடந்த கடும்போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 47 பேர் கொல்லப்பட்டனர். அதிபர் ஆதரவு படையினர் 11 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக அதிபர் படை வட்டாரங்கள் கூறுகையில், கிளர்ச்சியாளர்களின் பதுங்கு குழிகளாலும், கண்ணி வெடிகளாலும்தான் நாங்கள் ஹொதய்தா நகரை நெருங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது என்று தெரிவித்தன.



SCROLL FOR NEXT