ஜெனீவா,
இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் அமெரிக்காவின் பைசர் மற்றும் ஜெர்மனியின் பயோ என்டெக் மருந்து நிறுவனம் கூட்டாக தயாரித்து வழங்கும் தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு உலக சுகாதார நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்புதல் வழங்கியது.
இந்த நிலையில், தற்போது புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்தின் தடுப்பூசிக்கும், தென்கொரியாவின் அஸ்ட்ராஜெனேகா எஸ்கேபயோ நிறுவனம் தயாரித்து வழங்கும் தடுப்பூசிக்கும் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஐ.நா. சபை ஆதரவு பெற்ற கொரோனா தடுப்பு முயற்சியில் கையெழுத்திட்ட பல நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.