உலக செய்திகள்

வரலாற்றில் இன்று: ஆழ்கடலில் புதைந்த 'டைட்டானிக்' கனவு - 114 ஆண்டுகால அழியாத வடு

1912-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி, இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் துறைமுகத்திலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரை நோக்கி டைட்டானிக் தனது பயணத்தைத் தொடங்கியது.

சென்னை,

மனித வரலாற்றில் தொழில்நுட்பத்தின் உச்சமாகக் கருதப்பட்ட ஒரு பிரமாண்டம், இயற்கையின் முன் மண்டியிட்ட நாள் இன்று. "கடவுளே நினைத்தாலும் இந்தக் கப்பலை மூழ்கடிக்க முடியாது" என்று புகழப்பட்ட 'டைட்டானிக்', தனது முதல் பயணத்திலேயே ஆழ்கடல் சமாதியானது ஒரு தீராத சோகம்.

1912-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி, இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் துறைமுகத்திலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரை நோக்கி டைட்டானிக் தனது பயணத்தைத் தொடங்கியது. அக்காலகட்டத்தில் உலகின் மிகப்பெரிய மற்றும் அதிநவீன சொகுசு கப்பலாக இது திகழ்ந்தது. மெத்தென்ற படுக்கைகள், பிரமாண்ட உணவகங்கள் என ஒரு மிதக்கும் அரண்மனையாகவே இது காட்சியளித்தது.

பயணம் தொடங்கி நான்கு நாட்களே ஆன நிலையில், ஏப்ரல் 14, இரவு 11:40 மணிக்கு வட அட்லாண்டிக் பெருங்கடலில் மிதந்து கொண்டிருந்த ஒரு ராட்சத பனிப்பாறையின் மீது டைட்டானிக் மோதியது. கப்பலின் உறுதித்தன்மையில் இருந்த அதீத நம்பிக்கையால், போதிய உயிர் காக்கும் படகுகள் (Lifeboats) அங்கு இல்லை.

விளைவு, மோதிய இரண்டரை மணி நேரத்திற்குள், அதாவது ஏப்ரல் 15, 1912 அதிகாலை 2:20 மணிக்கு, டைட்டானிக் முழுமையாகக் கடலுக்குள் மூழ்கியது.

கப்பலில் மொத்தம் 2,224 பேர் இருந்தனர். அதில், சுமார் 1,517 பேர் உயிரிழந்தனர். வெறும் 700 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர் பல ஆண்டுகள் தேடுதலுக்குப் பிறகு, 1985-ம் ஆண்டுதான் கடலின் அடியில் சுமார் 12,500 அடி ஆழத்தில் டைட்டானிக்கின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த விபத்துதான் பிற்காலத்தில் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு விதிகளில் (SOLAS) பெரும் மாற்றங்கள் ஏற்பட முக்கிய காரணமாக அமைந்தது.

இந்தக் கொடூர விபத்து உலக நாடுகளை உலுக்கியது. இதன் விளைவாகவே, சர்வதேச கடல்சார் பாதுகாப்பு விதிகள் (SOLAS) உருவாக்கப்பட்டன. கப்பலில் பயணிக்கும் அனைவருக்கும் போதுமான உயிர் காக்கும் படகுகள் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கடுமையான விதிகள் அமலுக்கு வர இந்தத் துயரமே காரணியாக அமைந்தது.

Also read:டைட்டானிக் கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட தங்க கெடிகாரம்: எவ்வளவு ஏலம் போனது தெரியுமா?

வரலாறு எத்தனை முன்னேறினாலும், இயற்கையின் சீற்றத்திற்கு முன்னால் மனிதனின் படைப்புகள் எவ்வளவு சிறியவை என்பதை டைட்டானிக் இன்றும் நமக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது.