குவைத் சிட்டி,
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கடந்த 28ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை மந்திரி அமீர், ஈரான் புரட்சிப்படை தளபதி முகமது உள்பட பலர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், குவைத் நாட்டில் அமெரிக்க விமானப்படைத்தளம் அமைந்துள்ளது. அந்த படைத்தளத்தில் இருந்து இன்று அமெரிக்காவின் எப் 15 ரக 3 போர் விமானங்கள் பாதுகாப்புப்பணிக்காக புறப்பட்டுள்ளன.
போர் விமானங்கள் குவைத் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது அந்த போர் விமானங்களை குவைத் வான்பாதுகாப்பு அமைப்பு தவறுதலாக சுட்டு வீழ்த்தியது. அமெரிக்க போர் விமானங்களை ஈரான் விமானங்கள் என தவறுதலாக நினைத்து குவைத்து வான்பாதுகாப்பு அமைப்பு சுட்டுவீழ்த்தியது.
இந்த சம்பவத்தில் 3 போர் விமானங்களில் இருந்த 6 விமானிகளும் பாராசூட் மூலம் பத்திரமாக தரையிறங்கினர். அதேவேளை, 3 போர் விமானங்களும் தரையில் விழுந்து வெடித்து சிதறின. அமெரிக்க போர் விமானங்கள் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு குவைத் வருத்தம் தெரிவித்துள்ளது.