உலக செய்திகள்

உலகின் வயதான காண்டா மிருகம்: தான்சானியாவில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தது

தான்சானியாவில் உடல் நலக்குறைவால் உலகின் வயதான காண்டா மிருகம் உயிரிழந்தது.

டொடோமா,

உலகிலேயே வயதான காண்டாமிருகம் என்ற பெயரை தான்சானியா நாட்டில் வனவிலங்கு புகலிடத்தில் வசித்து வந்த பாஸ்டா என்ற பெண் காண்டா மிருகம் பெற்றிருந்தது. இந்த காண்டா மிருகத்துக்கு வயது 57.

இந்த காண்டாமிருகம் 3 வயதாக இருந்தபோது, 1965-ம் ஆண்டு, நொகோரோங்கோரோ பள்ளம் என்ற இடத்தில் முதன்முதலாக காணப்பட்டது. 54 ஆண்டு காலம் அந்தப்பகுதியிலேயே அது சுற்றித்திரிந்து வந்தது. வயதான காலத்தில் நோய்களால் அவதியுற்று வந்த அந்த காண்டாமிருகம் வனவிலங்கு புகலிடத்துக்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் 27-ந் தேதியன்று அந்த காண்டாமிருகம் வயோதிகத்தாலும், உடல்நலக்குறைவாலும் செத்து விட்டது.

இந்த காண்டாமிருகம் தன் வாழ்நாளில் ஒரு குட்டியைக் கூட போட்டது இல்லை என்றும் அதுவே அதன் நீண்ட ஆயுளுக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக காண்டாமிருகங்கள் 37 வயது முதல் 43 வயது வரை வாழ முடியும். அதே நேரத்தில் ஒரு இடத்தில் வைத்து நன்றாக பராமரித்து வந்தால் 50 ஆண்டு காலம்கூட வசிக்குமாம்.